இந்திய ரயில்வே பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக டிக்கெட் ரத்து செய்தல், ரீஃபண்ட் (Refund) நடைமுறைகள் மற்றும் பயண வகுப்பு மாற்றம் ஆகியவற்றில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாற்றங்கள் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் ரத்து செய்தால் பணம் ரீஃபண்ட் கிடையாது என்கிற புதிய விதியை அறிமுகப்படுத்துவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
புதிய விதிகளின்படி, சார்ட் (Chart) தயாரிக்கும் நேர மாற்றங்களுக்கு ஏற்ப டிக்கெட் ரத்து செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இருந்த 48, 12 மற்றும் 4 மணிநேரம் என்ற கால அளவுகள், தற்போது முறையே 72, 24 மற்றும் 8 மணிநேரம் என மாற்றப்பட்டுள்ளன.
| காலக்கெடு | பிடிக்கப்படும் கட்டணம் (தோராயமாக) |
| புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக | குறைந்தபட்ச ரத்து கட்டணம் |
| 72 முதல் 24 மணிநேரத்திற்குள் | டிக்கெட் கட்டணத்தில் 25% |
| 24 முதல் 8 மணிநேரத்திற்குள் | டிக்கெட் கட்டணத்தில் 50% |
| புறப்படுவதற்கு 8 மணிநேரத்திற்கு முன்னதாக | ரீஃபண்ட் கிடையாது |
குறிப்பு: ரயில் புறப்படுவதற்கு 9 முதல் 18 மணிநேரத்திற்கு முன்பாகவே சார்ட் தயாரிக்கும் பணி மாற்றப்பட்டுள்ளதால், பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட கூடுதல் அவகாசம் கிடைக்கும்.
ரீஃபண்ட் பெறும் முறை இப்போது கணிசமாக நெறிப்படுத்தப்பட்டுள்ளது:
எந்த கவுண்டரிலும் ரத்து செய்யலாம்: முன்னதாக டிக்கெட்டுகளை ரத்து செய்ய குறிப்பிட்ட நிலையங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது நாட்டின் எந்தவொரு ரயில்வே கவுண்டரிலும் டிக்கெட்டுகளை ரத்து செய்து ரீஃபண்ட் பெறலாம்.
ஈ-டிக்கெட் (E-ticket) பயனர்களுக்கு வசதி: ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர்கள் சில குறிப்பிட்ட சூழல்களில் ரீஃபண்ட் பெற டி.டி.ஆர் (TDR) தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இனி இந்தத் தேவை இல்லை; ரீஃபண்ட் தொகை தானாகவே (Automatic) பயனரின் கணக்கிற்குத் திரும்பும்.
ரயில் பயண வகுப்பை உயர்த்துவதற்கான விதிகளிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன அதில் கவுண்டர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை தங்கள் பயண வகுப்பை (Class) தரம் உயர்த்திக் கொள்ளலாம். முன்னதாக, சார்ட் தயாரிப்பதற்கு முன்பு மட்டுமே இந்த வசதி இருந்தது.
ஏஜென்ட்டுகள் மற்றும் இடைத்தரகர்கள் தட்கல் டிக்கெட்டுகளைப் பதுக்குவதைத் தடுக்கவும், முன்பதிவு முறையை மேம்படுத்தவும் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பு முறை.
முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்கு சில கட்டுப்பாடுகள்.
மனிதர்கள் அல்லாத 'பாட்' (Bot) மென்பொருட்களைத் தடுக்க ஆண்டி-பாட் சிஸ்டம் அமல்.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சுமார் 3 கோடிக்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய பயனர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.