சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்றவர்கள், வரும் சட்டசபை தேர்தலில் பிரேமலதா மற்றும் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் இருவரும் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். இதை ஏற்று, இருவரும் போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், 12 தொகுதிகள் வரை தே.மு.தி.க.,வுக்கு கேட்கப்பட்டு உள்ளன. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் பிரேமலதா தெரிவித்தார். இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். எனவே, கிடைக்கும் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் பிரேமலதா அறிவுரை வழங்கினார்.
கட்சியினரின் விருப்பத்தை ஏற்று, பிரேமலதாவும் விஜய பிரபாகரனும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதற்காக ரிஷிவந்தியம், விருத்தாசலம், பண்ருட்டி, விருகம்பாக்கம், சாத்துார், விருதுநகர் ஆகிய தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.