தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க, பணப் பட்டுவாடாவை கட்டுப்படுத்த புதுமையான கண்காணிப்பு முறைகள் முன்வருகின்றன. குறிப்பாக நெரிசலான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குறுகிய தெருக்களில் நடைபெறும் மறைமுக பரிவர்த்தனைகளை தடுக்கும் வகையில் ‘ட்ரோன்’ கேமராக்கள் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சென்னையில் சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான அதிகாரிகள் இந்த யோசனையை முன்வைத்தனர்.
தரையிலிருந்து கண்காணிக்க முடியாத இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுகள் வழங்கப்படுவதை கண்டறிய வான்வழி கண்காணிப்பு முக்கியம் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், இந்த ட்ரோன் கண்காணிப்பு குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அல்லது இந்தியத் தேர்தல் ஆணையம் இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
பாதுகாப்பு மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.அமைதியான மாநிலமாக இருந்தாலும், தேர்தல் செலவினங்களில் அதிக உணர்திறன் கொண்ட மாநிலமாக தமிழகம் கருதப்படுகிறது.
தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை ரூ.151 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.