இந்திய ரயில்வே வரும் ஏப்ரல் 01 முதல் ரயில் பயண விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 08 மணி நேரத்திற்கு முன்னதாகவே ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், ரீஃபண்ட் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளது.
தற்போது ரீஃபண்ட் செய்வதற்கு 04 மணி நேரமாக உள்ள காலக்கெடு 08 மணி நேரத்திற்கு முன்னதாக மாற்றப்பட்டுள்ளது. 08 முதல் 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால், 50 சதவீதக் கட்டணம் பிடிக்கப்படும். அதேப்போன்று, 24 முதல் 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 25 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும்.
மேலும், 72 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தல், குறைந்தபட்ச ரத்து கட்டணம் போக மீதித் தொகை திரும்பக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணிகளின் வசதிக்காக ரயில் சார்ட் தயாரிக்கும் நேரம், ரயில் புறப்படுவதற்கு 09 முதல் 18 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை பயணிகள் தங்களது பயண வகுப்பை உயர்த்திக்கொள்ளவும், ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ளவும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இனிமேல் கவுண்டர் டிக்கெட்டுகளை எந்தவொரு ரயில் நிலையத்திலும் ரத்து செய்து கொள்ளலாம்.அதேப்போன்று இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.