தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், புதியம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக அழகு மாரியப்பன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற அழகு மாரியப்பன், அதிகாலையில் தனது வீட்டின் ஆட்டுத் தொழுவத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காலையில் வெளியே வந்த பெற்றோர் இதைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர்.
தகவலறிந்து வந்த குளத்தூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.