துணிக்கடை முதல் ஸ்டார்பக்ஸ் வரை வேலை செய்தேன் – நடிகை கயாடு லோஹர் பகிர்ந்த போராட்டக் கதை!
Seithipunal Tamil March 26, 2026 04:48 PM

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான “டிராகன்” படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை கயாடு லோஹர். அந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்ததோடு, தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராகவும் மாறியுள்ளார். சமீபத்தில் சாய் அபயங்கரின் “பவழ மல்லி” பாடலில் அவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் குறித்து கயாடு லோஹர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பல்வேறு வேலைகள் செய்து தான் வாழ்க்கையை முன்னெடுத்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் பல வேலைகள் செய்திருக்கிறேன். ஸ்டார்பக்ஸ், துணிக்கடை போன்ற இடங்களில் வேலை பார்த்தேன். சில ஐடி நிறுவனங்களிலும் வேலை செய்தேன். ஆனால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எனக்கு லேப்டாப்பை கூட சரியாக பயன்படுத்த தெரியாது. ஐடி கம்பெனிகளில் நான் வேலை பார்த்தது பெரும்பாலும் ட்ரெய்னிங் காலத்தில் மட்டும் தான்,” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.

பல போராட்டங்களுக்குப் பிறகே தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த அனுபவங்கள் தான் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நடிகை கயாடு லோஹர் தற்போது மலையாள சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இந்த படம், 1950–60 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், பாலிவுட் பாடகர் விஷால் மிஸ்ரா முதன்முறையாக மலையாளத்தில் பாடிய “காட்டுச்செம்பகம்” பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேர்ல்ட் வைட் ஃபிலிம்ஸ் மற்றும் சி க்யூப் ப்ரோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.