இன்று நாடு முழுவதும் ஸ்ரீராம நவமி திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தீய சக்திகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட மகாவிஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரமான ஸ்ரீராமபிரான் அவதரித்த இந்த நன்னாளில், அவரை வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும்.
அயோத்தி: திரேதா யுகத்தில் அநீதியை அழித்து, ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய 'மரியாத புருஷோத்தமன்' ஸ்ரீராமரின் பிறந்தநாளை இன்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ராம நவமியாகக் கொண்டாடுகின்றனர்.
இன்று ராம நவமி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையிலேயே நீராடி, வீட்டைத் தூய்மை செய்து ராமபிரானை வழிபட வேண்டும். ராமர் படத்திற்குச் சந்தனம், குங்குமமிட்டு, துளசி மாலை அணிவிப்பது விசேஷம். ராமருக்கு உகந்த பானகம், நீர் மோர், வடைப்பருப்பு, சர்க்கரை பொங்கல் மற்றும் பாயாசம் ஆகியவற்றைப் படைத்து வழிபடலாம். நாள் முழுவதும் உணவின்றி விரதம் இருப்பது சிறப்பு. உடல்நிலை அனுமதிப்பவர்கள் நீர் மற்றும் பழங்களை மட்டும் உட்கொள்ளலாம்.

மன அமைதி கிடைக்கவும், எடுத்த காரியங்கள் தடையின்றி முடியவும் இன்று கீழ்க்கண்ட ஸ்லோகங்களைச் சொல்லலாம்:
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே | ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ ||
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே | ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே || (இந்த ஒரு ஸ்லோகத்தைச் சொல்வது விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் சொன்னதற்கு இணையான பலனைத் தரும்).
பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகி வறுமை நீங்கும். ராமரை வழிபடுபவர்களுக்கு அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் அருட்பார்வை தானாகவே கிட்டும். 'ஸ்ரீராம ஜெயம்' என்ற நாமத்தை இன்று 108 முறை எழுதுவது அல்லது சொல்வது மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்கித் தெளிவைத் தரும்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் இன்று சூரிய திலகம்உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் சரயு நதியில் நீராடி ராமபிரானைத் தரிசித்து வருகின்றனர்.