கும்மிடிப்பூண்டியில் தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கங்கன்தொட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாபு - லதா தம்பதியரின் 2வயது ஆண் குழந்தை தர்ஷன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். திடீரென குழந்தை வீட்டில் காணாமல் போனதை கண்டு தேடினர். அப்போது வீட்டில் தண்ணீர் பக்கெட்டில் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த சிப்காட் காவல்துறையினர் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி உயிரிழந்த குழந்தை சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த 2வயது ஆண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.