தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தில், தனது மகனின் நினைவாக ஒரு தம்பதியினர் கடந்த 23 ஆண்டுகளாக நடத்தி வரும் வினோத திருமண வைபவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2003-ஆம் ஆண்டு, லாலு மற்றும் சுக்கம்மா தம்பதியினரின் மகன் ராம் கோட்டி, தனது காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்டார். சில நாட்களில் அவர் காதலித்த பெண்ணும் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த துயரத்தால் உடைந்த பெற்றோர், தங்கள் மகனை தெய்வமாக வழிபட தொடங்கினர்.
தங்களது மகன் கனவில் தோன்றி தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும், கோவில் கட்டுமாறு கேட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். இதனால் வீட்டிற்குள்ளேயே ஒரு சிறிய சிலையமைத்து கோயில் கட்டினர். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமி அன்று, ராம் கோட்டி மற்றும் அவர் காதலித்த பெண்ணின் சிலைகளுக்கு முறைப்படி திருமண சடங்குகளை நடத்தி வருகின்றனர்.
தொடக்கத்தில் தனிப்பட்ட துயரமாக தொடங்கிய இந்த நிகழ்வு, தற்போது ஊர் மக்கள் அனைவரும் கூடி நடத்தும் ஒரு பாரம்பரிய விழாவாக மாறியுள்ளது. ஸ்ரீராம நவமியில் ராமருக்கும் சீதைக்கும் நடக்கும் திருக்கல்யாணத்தை போலவே, இந்த சிலைகளுக்கும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது.
Edited by Siva