சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
அருண் சின்னதுரை March 29, 2026 02:14 AM
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - குற்றவாளிகள் 9 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி.
 
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு
 
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப் பட்ட 9 காவலர்களும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று (மார்ச் 27) அனுமதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வணிகர் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் இருவரும் அதே பகுதியில் கைப்பேசி விற்பனை, பழுது நீக்கும் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை ஜெயராஜ் அரசு அனு மதித்த நேரத்தைவிட தாமதமாக மூடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
 
குற்றச்சாட்டுகள் உண்மை
 
இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். எனவே, அவரை வழக்கிலிருந்து விடுவித்த நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனர். சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, நீதிபதி முத்துக்கு ரன் முன் கடந்த 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீஸார் பதிந்த வழக்கு பொய்யானது என தெரியவருகிறது. இந்த வழக்கைப் பொருத்தவரை, சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நீதிமன்றம் உறுதி செய்கிறது.
 
மனநலச் சிகிச்சை
 
மேலும், அனைத்துத் தரப்பு வாதங்களை வைத்து பார்க்கும் போது, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் சிறையில் உள்ள காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களது மனநிலை எந்தளவு உள்ளது என்பதை உளவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து, அறிக்கையாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார் நீதிபதி. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, சிறையில் உள்ள அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமி துரை, செல்லதுரை, வெயிலு முத்து, தாமஸ் ஆகிய 9 பேரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்தனர். அங்கு மனநலச் சிகிச்சைப் பிரிவில் அவர்களை அனுமதித்தனர்.
 
சிறையில் அடைக்கப்படுவர்.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது...,”சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் தண்டனை வழங்கப்பட உள்ளது. அவர்களின் மனநிலை, உளவியல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு மன நலன் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும், சில பரிசோதனைகள் செய்யப்படவுள்ளது. இவை நிறைவு பெற்ற பிறகு, ஓரிரு தினங்களில் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவர். பரிசோதனைகள் குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றனர்.
 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.