இந்தியாவின் எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாளை (ஏப்ரல் 1, 2026) நாடு முழுவதும் தொடங்குகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இக்கணக்கெடுப்பு, தள்ளிப்போய் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.11,718 கோடி நிதியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
இரு கட்டங்களாக நடைபெறும் பணிகள்:
நாட்டின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்சய் குமார் நாராயண் இது குறித்து விளக்குகையில், கணக்கெடுப்பு பணிகள் இரண்டு முக்கியக் கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
* சுய விவர கணக்கெடுப்பு: இது நாளை முதல் ஏப்ரல் 15 வரை குறிப்பிட்ட மாநிலங்களில் நடைபெறும்.
* வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு: இது ஏப்ரல் 16 முதல் மே 15 வரை நடைபெறும்.
அந்தமான் நிக்கோபார், டெல்லி, கோவா, கர்நாடகம், ஒடிசா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் இந்தப் பணிகள் தொடங்குகின்றன. ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் மே மாதத்திலும், பிற மாநிலங்களில் வெவ்வேறு கால அட்டவணையிலும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த பணிகளையும் 2027 மார்ச் 31-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கணக்கெடுப்பின் சிறப்பம்சங்கள்:
வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. சுமார் 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் பிரத்யேக மொபைல் செயலியைப் பயன்படுத்தி தரவுகளை உடனுக்குடன் சேகரித்துச் சமர்ப்பிப்பார்கள். இந்தச் செயலி தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட 16 மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்களின் வசதிக்கேற்ப ஆன்லைன் மூலமாக 'சுய கணக்கெடுப்பு' (Self-Enumeration) செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் தங்கள் மொபைல் எண் மூலம் இணையதளத்தில் லாக்-இன் செய்து விவரங்களைப் பூர்த்தி செய்யலாம். அவ்வாறு பூர்த்தி செய்த பிறகு கிடைக்கும் அடையாள எண்ணைக் களப்பணியாளர்களிடம் பகிர்ந்துகொண்டால் போதுமானது. இது கணக்கெடுப்புப் பணியை எளிதாக்குவதுடன், துல்லியமான தரவுகளைப் பெறவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.