விமானங்களின் தாமதத்திற்கு பயணிகள் இழப்பீடு பெற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பயணிகள் கூடுதல் லக்கேஜ் கொண்டு வந்தால், ஒவ்வொரு கிராமிற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், பயணிகளின் நேரத்திற்கு ஏன் மதிப்பளிப்பதில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலை நேர்காணல், வணிக கூட்டங்கள் அல்லது மருத்துவமனை அவசரங்களுக்காக மக்கள் அதிக பணம் கொடுத்து விமான டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். ஒரு மணிநேர தாமதத்தை பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் பல மணிநேர தாமதம் என்பது பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விமானம் தாமதமானால் பயணிகளுக்கு உரிய பணப்பலன் அல்லது முழு தொகையையும் திருப்பி அளிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
பெங்களூரு மற்றும் சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த 18 மணிநேர தாமதங்கள் பயணிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தியதை அவர் சுட்டிக்காட்டினார். "நீங்கள் கிராமிற்கு பணம் வாங்கினால், ஒவ்வொரு மணிநேர தாமதத்திற்கும் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்" என்ற அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edited by Siva