தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் போடுவது, பிரச்சாரம் செய்வது என பரபரப்பாக இயங்க துவங்கியுள்ளன. அந்த வகையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக பார்க்கப்படுகிறது. விஜய் அடிப்படையில் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் அவர் குறிப்பிட்டு சதவீத வாக்குகளை வாங்குவார் என கணிக்கப்படுகிறது.. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை அவர் கவர்வார் என தெரிகிறது..
தமிழகமெங்கும் தவெக பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை அயனாவரத்தில் நேற்று தவெகபொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மது பாட்டில்களை உடைத்து சிலர் மாடியிலிருந்து மேடையில் இருந்த பெண் நிர்வாகிகளின் மீது வீசியாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மேடையில் மிகவும் ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா ‘இதை திமுகதான் செய்கிறது.. முதல்வர் ஸ்டாலின் அவர்களே!.. நிறுத்திக் கொள்ளுங்கள்.. நாங்கள் திருப்பி அடிடுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.. நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்.. சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இன்று இரவுக்குள் கைது செய்ய வேண்டும்.. இல்லையென்றால் நாங்கள் இங்கேயே போராட்டம் நடத்துவோம்’ என்றெல்லாம் பேசியிருந்தார்.
இதனையடுத்து, அந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள சென்னை காவல்துறை ‘தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள லாட்ஜில் மது போதையில் இருந்த இருவர் சண்டை போட்டுக் கொண்டனர்.. அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மது பாட்டிலை உடைத்து வீசிக்கொண்ட போது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் விழுந்திருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..