தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
மேலும் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே மதியம் 12:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த பிரசாரம் நடைபெற தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரசாரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய்யின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களிலும் தொண்டர்கள் பின்தொடரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் நேரில் வருவதைத் தவிர்த்து, சமூக வலைத்தளங்கள் அல்லது தொலைக்காட்சி நேரலை வாயிலாக பிரசாரத்தைக் காணுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.