பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் ஆயுஷ் குமார், குடும்ப வறுமை மற்றும் கல்லூரிப் படிப்பிற்காகத் தனது சிறுநீரகத்தை விற்று மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மறைவுக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், 6 லட்ச ரூபாய்க்குத் தனது சிறுநீரகத்தை விற்க அந்த மாணவர் சம்மதித்துள்ளார்.
ஆனால், கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அவருக்கு வெறும் 3.5 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவர், “என்னைப் பற்றி என் அம்மாவிடம் எதுவும் சொல்லிவிடாதீர்கள்” என்று கண்ணீருடன் போலீசாரிடம் கெஞ்சியது பார்ப்பவர் நெஞ்சை உருக்கியது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட சிறுநீரக விற்பனை மாஃபியா கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நொய்டா, லக்னோ மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இந்த கும்பலின் நெட்வொர்க் பரவியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர் ஆயுஷின் கையில் “I Love You Mom” என்று பச்சை குத்தப்பட்டிருப்பது, அவர் தனது தாயின் மீது வைத்திருக்கும் பாசத்தைக் காட்டுகிறது.
தனது குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்து அவர் எடுத்த இந்தத் தவறான முடிவு, இப்போது அவரது உயிரையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்களைப் பிடிக்கப் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.