கௌஹாத்தியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி, மழையினால் தாமதமாகத் தொடங்கி 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், பேட்டிங்கிற்கு வந்த ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, உலகின் தலைசிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே லாங்-ஆன் திசையில் ஒரு இமாலய சிக்ஸரை அடித்து ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிரவைத்தார்.
பெரிய ஜாம்பவான் பேட்ஸ்மேன்களே பும்ராவின் பந்துவீச்சில் ஆடத் திணறும் போது, இந்த 15 வயது சிறுவன் எந்த பயமும் இன்றி பும்ரா வீசிய யார்க்கர் மிஸ் ஆனதைப் பயன்படுத்தி சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். பும்ராவின் ஒரே ஓவரில் 14 ரன்களை விளாசிய வைபவ், 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து மிரட்டினார். பும்ராவே இதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே தனது பந்துவீச்சு முனைக்குத் திரும்பியது, அந்தச் சிறுவனின் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.