இன்று வெள்ளிக்கிழமை ரொம்பவும் விசேஷமான நாள். மகாலட்சுமி எதில் எல்லாம் வாசம் செய்கிறாள்? வாசனையான, சுகந்தம் தரும் பொருட்களில் எல்லாம் நிச்சயமாகவும், நிரந்தரமாகவும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதுவும், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாகவே சந்தோஷத்துடன் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது காலம் காலமாக நம் வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.
தனித்த சாம்பிராணி என்று இல்லாமல் நம் தேவைகளுக்கேற்ப சாம்பிராணியுடன் சில பொருட்களைச் சேர்த்து தூபம் இட வீட்டில் மங்கலங்கள் நிறையும் என்பது உறுதி. அந்த வகையில் சாம்பிராணியுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்தால், என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கேற்ப பலனைப் பெறுங்கள்.
சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். சாம்பிராணியில் அகில் சேர்த்து தூபமிட குழந்தைபேறு உண்டாகும். சாம்பிராணியில் தூதுவளையை சேர்த்து தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும். சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். சாம்பிராணியில் அருகம்புல் பொடியை சேர்த்து தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.. சாம்பிராணியில் வெட்டிவேரை சேர்த்து தூபமிட காரியசித்தி உண்டாகும். சாம்பிராணியில் வேப்பிலையை சேர்த்து தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். சாம்பிராணியில் வெண்கடுகை சேர்த்து தூபமிட பகைமை விலகும்.