'இடஒதுக்கீடு குறித்த பேச்சு?' - எம்.ஜி.ஆர் சந்தித்த மிகப்பெரிய தோல்வி பற்றி தெரியுமா? | Vote Vibes
Vikatan April 10, 2026 05:48 PM

தமிழக அரசியலில் தோல்வியே காணாதவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் தனது அரசியல் பயணத்தில் ஒரு தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறார். அது எப்போது தெரியுமா?

திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972-ஆம் ஆண்டு, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக-வைத் தொடங்குகிறார்.

முதல்வர் அரியணையில் எம்.ஜி.ஆர்

கட்சியைத் தொடங்கிய அவர் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து முதல்வர் அரியணையில் அமர்ந்தார்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்றாவது வருடத்தில், 1980-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் திமுக, இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அதிமுக, ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தைச் சந்தித்தது.

படுதோல்வி

இந்த நாடாளுமன்றத் தேர்தல்தான் எம்.ஜி.ஆருக்குத் தோல்வியைக் கொடுத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக மொத்தமாகவே இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஒன்று கோபிச்செட்டிப்பாளையம். மற்றொன்று சிவகாசி. அதேசமயம் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அந்தக் கூட்டணியில் இந்திரா காங்கிரஸ் 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர் தோல்விக்கானக் காரணம்

அதேபோல, திமுக 16 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது.

1980 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவது குறித்து எம்.ஜி.ஆர் பேசியதுதான் இந்தத் தோல்விக்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: திமுக Vs அதிமுக - அதிகபட்ச தொகுதிகளை வென்றது எப்போது? | Vote Vibes
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.