ஐதராபாத்: காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்து விபத்து; BMW காரில் சிக்கி வழக்கறிஞர் பலி
Vikatan April 12, 2026 05:48 PM

ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ராவ் தனது பி.எம்.டபிள்யூ காரில் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார் காஞ்சிகச்சேர்லா என்ற இடத்தில் இருக்கும் டோல்கேட் அருகில் வந்தது. அந்நேரம் அங்கு காங்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி ஒன்று டோல்கேட் அருகில் வந்ததும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் காங்கிரீட் கலவை டேங்கர் அப்படியே அருகில் நின்ற பி.எம்.டபிள்யூ கார் மீது விழுந்தது.

இதில் கார் அப்படியே நொறுங்கியது. காருக்குள் இருந்த ஸ்ரீனிவாஸ் ராவை வெளியில் எடுக்கவே முடியவில்லை.

கார் மீது காங்கிரீட் டேங்கர்

கிரேன் கொண்டு வரப்பட்ட பிறகே வழக்கறிஞர் காரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டார். இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கார் மீது காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருக்கிறது.

டேங்கரில் அதிக அளவு காங்கிரீட் கலவை எடுத்து வரப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் காங்கிரீட் கலவையுடன் வந்த லாரியை டிரைவர் திருப்ப முயன்றுள்ளார்.

வழக்கறிஞர் ராவ்

ஆனால் லாரியில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை. அந்நேரம் அந்த வழியாக கார் வந்துள்ளது. டேங்கரில் இருந்த அதிகப்படியான எடை காரணமாக லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் காங்கிரீட் டேங்கர் நிலைதடுமாறி காரில் விழுந்ததில் அப்படியே கார் நொறுங்கியது.

விபத்து நடந்தவுடன் டோல்கேட் ஊழியர்கள் ஓடி வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் அமராவதியில் நடந்த பார் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். காரில் வழக்கறிஞர் மட்டுமே இருந்ததார்.

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த கார்; 7 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.