தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கடற்கரைச் சாலைப் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் அவர்களின் மகன் ஷால்வின் (23), கடல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சானியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருந்தது.
கடல் பணிக்காக வெளியே சென்றிருந்த ஷால்வின், ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி சானியா, ராமேஸ்வரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. சானியாவை உடனடியாக வீட்டிற்கு வருமாறு ஷால்வின் அழைத்துள்ளார்.
ஆனால், அவர் வருவதில் தாமதம் ஏற்படும் என தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஷால்வின், மது போதையில் வீட்டின் உள்ளே உள்ள மரக்கட்டையில் சுடிதார் சால்வையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து நேற்று காலை தகவல் கிடைத்ததும், தருவைகுளம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், திருமணம் ஆகி வெறும் 8 மாதங்களே ஆன நிலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.