டீ, காபி முதல் சாப்பாடு வரை தாறுமாறு விலை உயர்வு.. மெனு கார்டை மாற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள்!
TV9 Tamil News April 12, 2026 07:48 PM

ஈரான்- அமெரிக்கா இடையே நிகழ்ந்து வரும் போரால் உலகம் முழுவதும் பெட்ரோல் பொருள்கள் மற்றும் கேஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக, கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தை மத்திய அரசு சிறிதளவு கட்டுப்படுத்தி உள்ளது. அந்த வகையில், வணிக சிலிண்டர்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிறிய ஹோட்டல்கள் அதிகளவு மூடப்பட்டுள்ளன. இதே போல, புதுச்சேரி மாநிலத்தில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு சிறிய ஹோட்டல்கள் அடைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடை சமாளித்துக்கொண்டு செயல்பட்டு வரும் அரிதான ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ஹோட்டல்களில் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பூரி மற்றும் பொங்கல் ஆகியவை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

இட்லி, வடை, பரோட்டி, பிரியாணி விலை கடுமையாக உயர்வு

இதே போல, இட்லி மற்றும் வடை விலை ரூ.6- இல் இருந்து ரூ.10- க்கு உயர்த்தப்பட்டுள்ளது. பரோட்டா விலை ரூ.15- இல் இருந்து ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமான விலையான ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மற்றும் சாப்பாடு ரூ.150- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெரிய ஹோட்டல்களில் குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அரசு.. 5கிலோ சிலிண்டர் இரட்டிப்பு.. யாருக்கு தெரியுமா?

டீ – காபி விலை ரூ.30- ஆக உயர்வு

இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுலாவுக்காக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களான கடந்த வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 10) முதல் ஒயிட் டவுன் பகுதிகளில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இவர்கள் ஹோட்டல்களில் சரியான உணவு வகைகள் கிடைக்காத காரணத்தால் சாலையோரங்களில் உள்ள ஹோட்டல்களை நாடி வருகின்றனர். இதே போல, டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது, டீ ரூ.20 மற்றும் காபி ரூ.30- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வு தொடர்பாக ஹோட்டர் உரிமையாளர்கள் கருத்து

இது தொடர்பாக, ஹோட்டல்களின் உரிமையாளர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு உணவு தேவையெனில், முதலிலேயே முழுமையாக ஆர்டர்கள் கொடுக்க வேண்டும். அடிக்கடி கேஸ் உபயோகப்படுத்த முடியாது என்ற காரணத்தால், ஒரே நேரத்தில் முழுமையாக உணவை சமைத்து வருவோம். தற்போது உயர்த்தப்பட்ட விலைகளின் பட்டியல் அடங்கிய மெனு கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும், கேஸ் அடுப்பு எரிந்து கொண்டே தயாரிக்கும் உணவு வகைகளான தோசை, கிரில்டு உணவுகள் ஆகியவை வழங்கப்படாது என தெரிவித்தனர்.

மேலும் படிக்க: தேர்தலில் தில்லுமுல்லு.. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரியில் கள்ள ஓட்டு.. இளைஞருக்கு காப்பு!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.