தமிழக சட்டசபைக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், சென்னை திநகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ கருணாநிதிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு பதில், அவரின் அண்ணனான திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து திநகர் கிழக்கு பகுதி செயலாளர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ராஜினாமா தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: திநகர் பொது மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.நிறைய கேள்விகள்.ஏன் பதவியை ராஜினாமா செய்தேன் என சமூக ஊடகம், நேரிலும், தொலைபேசியிலம் தினமும் நிறைய பேர் தொடர்பு கொள்கின்றனர். அவர்களுக்கு சிறிய விளக்கம் கொடுக்கிறேன்.ஏதோ வேட்பாளர் சீட் கொடுக்காத காரணத்தினாலும், அண்ணன் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டதால் கோபித்து கொண்டார் என்பது போன்று சொல்கிறார்கள். அண்ணன் மகனாக இருந்தாலும், எனது மகனாக இருந்தாலும் தப்பு என்றால் தப்பு தான்.ஏன் சொல்கிறேன் என்றால், அவர் சென்னை மாநகராட்சியின் இந்த வார்டு கவுன்சிலராக பணியாற்றும்போது, அவர் செய்த செயலால் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டனர். துயரப்பட்டனர் என்பது எங்களுக்கு தான் தெரியும்.
அந்த மக்கள் என்னிடம் வந்து சொன்ன போது, உங்கள் அண்ணன் மகன் தானே. நீ சொல்லக்கூடாதா? செய்யக்கூடாதா? என என்னிடம் பல பேர் பலமுறை சொல்லி பார்த்தனர். அதை பொறுத்து அவரிடம் சொல்லி பார்த்தேன். எனது பேச்சை அவர் கேட்கவில்லை. ஆனால்,மக்கள் பணி நான் செய்தேன். இப்படிப்பட்ட வேட்பாளரை திநகர் முழுவதும் ஓட்டு கேட்டு மக்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. அதேபோன்று என்னை வளர்த்த கட்சிக்கு, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு கட்சிக்கு துரோகம் செய்யவிரும்பவில்லை. இதனால், 30 வருட உழைப்பை 2நிமிடத்தில் தூக்கி போட்டுவிட்டேன். பதவி ஆசையோ எந்த ஆசையோ இல்லை. நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் தான் செய்தேன். கண்டிப்பாக நல்லது நடக்கும். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.