மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜனதா நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தி.மு.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் வெளியிட்ட வீடியோவை விமர்சித்த அவர், ஒரு முதலமைச்சர் பேச வேண்டிய பேச்சா இது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தன்னை மற்றும் சுந்தர் சி-யைத் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த குஷ்பு, சுயமரியாதைக்காகவே தான் தி.மு.க-விலிருந்து வெளியே வந்ததாகத் தெரிவித்தார்.
அமைச்சர் பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்தில், அது தனது குரல் இல்லை என்று அவர் ஏன் வழக்கு தொடரவில்லை என்றும், அப்படியென்றால் அந்த ஆடியோ உண்மைதானே என்றும் கேள்வி எழுப்பினார். நடிகர் விஜய்யின் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருவதாகவும், அதன் தாக்கம் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரியும் என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஏன் தமிழகத்திற்குப் பிரசாரத்திற்கு வரவில்லை என்று கேட்க முதல்வருக்குத் தைரியம் இருக்கிறதா என்றும் அவர் சாடினார்.