தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலைப் பறக்கவிட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளரான அவர் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலினின் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாவதற்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தான் தணிக்கை வாரியம் மூலம் உதவி செய்தார். அதற்காக உதயநிதி டீம் மொத்தமும் எல். முருகனின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பா.ஜ.க.வைப் புகழ்ந்து பாடினர்” என அதிர வைத்தார்.
இதுமட்டுமின்றி, “அமித்ஷாவின் மகனுடன் தி.மு.க. தரப்பினர் மறைமுகமாகப் பல்வேறு வணிகத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியே பா.ஜ.க.வை எதிர்ப்பது போலக் காட்டிக்கொண்டு, உள்ளே கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்கள். இந்தியாவில் மம்தா பானர்ஜி ஒருவரே பா.ஜ.க.வை உண்மையாக எதிர்க்கிறார்.
தி.மு.க. எல்லாம் வாக்கு வங்கிக்காக நடிக்கும் கட்சி” என ஆதவ் அர்ஜுனா விளாசினார். நீட் தேர்வு மற்றும் வக்பு வாரிய விவகாரங்களில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை “தேர்தல் நேரத்து நாடகம்” என அவர் விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த “பகீர்” குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.