தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளன. வரும் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவருக்கொரு குணம் உண்டு என்று கருப்பு கொடியேற்றி இன்று காட்டிவிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இது வெறும் டிரைலர்தான். மெயின் பிச்சரை பார்க்க வேண்டும் என்று டெல்லி ஆசைப்படக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழர்கள் ரத்தத்தில் சூடு குறைந்து விட்டது. தெருவில் இறங்கி போராடமாட்டார்கள் என நினைக்க வேண்டாம். மொழிக்காக தெருவில் இறங்கியவர்கள், இனத்தின் உரிமைக்காக இறங்கமாட்டோமா..? என்று சூளுரைத்துள்ளார். மேலும், தமிழருக்காக போராட யார் இருக்கானு நினைக்காதிங்க. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கான். 1000 எமர்ஜென்சிகளை பார்க்க தயார் என்று எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.