மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படாது என்றும், தமிழ்நாடு எம்.பி.க்களின் எண்ணிக்கை உயரும் எண்டு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில் அரசியலமைப்பின் 131-வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மத்திய அரசு அவையில் அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து இதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, இன்று பிற்பகல் இந்த மசோதா குறித்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, ''மசோதாவை எதிர்த்தவர்களை நாட்டின் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த மசோதாவை அரசியலாக்கப் பார்க்காதீர்கள். இன்று இந்த மசோதாக்களை எதிர்த்தால், அதன் எதிர்வினைகளை நீங்கள் பல ஆண்டுகள் எதிர்கொள்ள வேண்டும்.
கொள்கை அளவில் எந்த ஒரு கட்சியும் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிக்க வேண்டும். பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டால் தங்கள் பதவிகள் பறிபோகும் என நினைக்கிறார்கள். தங்கள் பதவிகளுக்கு ஆபத்தில்லை என்பதால், பஞ்சாயத்துகளில் 50% வரை இட ஒதுக்கீடு வழங்கிவிடுகிறார்கள்.''
இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் மக்களவையில் மசோதா குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படாது என்றும், தமிழ்நாடு எம்.பி.க்களின் எண்ணிக்கை உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் தொகுதி மறுவரையறை விதிகளை வகுத்தது. அந்த விதிகளைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். 2029 ஆம் ஆண்டுக்கு முன் தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால் தென்மாநிலங்களுக்கு நன்மையே பயக்கும் என்றும், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் எந்த ஒரு இழப்பையும் சந்திக்காது என்றும், தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதி 59ஆக உயரும் என்றும், தமிழ்நாட்டில் தற்போது உள்ள 7.18% என்பது 7.23% ஆக உயரும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை தொடர்பாக தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம் என்றும், எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கேள்விக்கும் நாங்கள் தகுந்த பதில் அளிக்க தயாராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.