திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!
Dhinasari Tamil April 17, 2026 02:48 AM

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இம்மசோதாக்கள் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையாற்றினார்.

திருஷ்டியை கழிக்க கருப்பு உடை!

தெற்கோ, வடக்கோ, மேற்கோ, கிழக்கோ… யாருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைந்த தொகுதி மறுவரையறை மசோதா தீங்கு விளைவிக்காது. அதற்கான உறுதிமொழி வேண்டும் என்றால், அதையும் தருகிறேன். தமிழில் இதற்கு ஏதேனும் வார்த்தைகள் இருந்தாலும் சொல்லுங்கள் அதனையும் பயன்படுத்தி நான் இந்த அவையில் பேசுகிறேன். ஒரு நல்ல காரியம் தடைபடக் கூடாது என்பதற்காக கருப்பு நிறத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள். மசோதா நிறைவேறும்போது, கருப்பு உடை அணிந்து வந்ததற்கு நன்றி. – என்று, நாடாளுமன்றத்திற்கு திமுக எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்த நிலையில் கிண்டல் செய்யும் விதமாக பிரதமர் மோடி பேசினார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து…

இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நேரம். இத்தகைய மசோதா நிறைவேற்ற நமக்கு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்மசோதாக்கள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். புதிய வலாறு படைக்க நாடாளுமன்றத்துக்கு பொன்னான நாள்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். நாம் அனைவரும் இணைந்து நாட்டுக்கு புதிய திசையை காட்டப் போகிறோம். 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காலத்தின் கட்டாயம். எதிர்க்கட்சிகள் அரசியல் காரணத்துக்காகவே இம்மசோதாக்களை எதிர்க்கின்றன. தனிப்பட்ட முறையில் ஆதரிக்கின்றன. ஆனால், பொது வெளியில் எதிர்க்கின்றன. இம்மசோதாவை நிறைவேற்றும் பெருமை ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமல்ல. இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களை கடந்த காலங்களில் பெண்கள் மன்னிக்கவில்லை. 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இந்த மசோதாக்களை கொள்கை அளவில் எந்த ஒரு கட்சியும் எதிர்க்கவில்லை.

இந்தியாவைக் கட்டமைப்பதில் பெண்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் உள்ளவர்களுக்கு தங்களின் உரிமையைப் பெறும் நேரம் வந்துவிட்டது. 30 ஆண்டுகளில் ஊராட்சி பிரதிநிதித்துவம் காரணமாக பெண்கள் அரசியல் அனுபவம் பெற்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்துள்ளனர். முதலில் 33 சதவீத பெண்கள் மக்களவைக்குள் வர அனுமதிக்க வேண்டும். உள் ஒதுக்கீட்டை அவர்கள் முடிவு செய்வார்கள்.

மகளிர் 33 சதவீத இட ஒதுக்கீட்டால் தங்கள் பதவி பறிபோகும் என சிலர் நினைக்கிறார்கள். கையில் துடைப்பம் வைத்துள்ளவர்கள், நாளை நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் அமரப் போகிறார்கள். உள்ளாட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரும் போது மக்களவையிலும் ஏன் தரக் கூடாது. 

மகளிர் இட ஒதுக்கீடு என்பது நாட்டின் நலனுக்கான முடிவு. இதில் அரசியல் செய்ய வேண்டாம். அம்மசோதாவை எதிர்த்தால், அந்தத் தவறை உங்களால் எப்போதும் சரி செய்ய முடியாமல் போய் விடும். 

எல்லா வகையிலும் நம்மை மிஞ்சிய பெண்களின் உரிமையை நாம் ஏன் தடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளின் எண்ணங்களையும் பெண்கள் கவனித்து வருகின்றனர். இம்மசோதாக்களை எதிர்த்தால் நீண்ட காலத்திற்கு மோசமான விளைவுகள் ஏற்படும். நமது நோக்கத்தில் பிழை இருந்தால் நம்மை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்.  மகளிர் முன்னேற்றத்தை எத்தனை காலம் தடுப்பீர்கள். திறமைசாலியான பெண்கள் அதிகாரத்துக்கு வரத் தயாராக உள்ளனர். 

நாட்டின் ஒரு பகுதியின் நலன் மட்டுமே முக்கியம் அல்ல. இங்குள்ளவர்களில் சிலர் நாட்டின் ஒரு பகுதி வளர்ச்சி குறித்து மட்டும் சிந்திக்கக்கூடாது. விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் மாற்றம் இல்லை. எந்த ஒரு மாநிலத்துக்கும் அநீதி இருக்காது. எந்த ஒரு விஷயத்துக்கும் எந்த ஒரு மாநிலத்துக்கும் அநீதி இழைக்கப்படாது.

தொகுதி மறுவரையறை குறித்த சந்தேகங்களுக்கு அமித்ஷா ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் யாருக்கும் பாகுபாடு ஏற்படாது என உறுதிமொழி வழங்கத் தயார். தமிழில் இதற்கு பொருத்தமான வார்த்தை இருந்தால் அதனை பயன்படுத்த தயார். மகளிர் இட ஒதுக்கீட்டை தடுத்தால், அதனால் எங்களுக்குதான் லாபம் கிடைக்கும். எங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கக் கூடாது என நீங்கள் நினைத்தால் மசோதாவை ஆதரியுங்கள்.

வளர்ந்த இந்தியா என்பது, சிறந்த கட்டமைப்பு அல்லது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வளர்ந்த இந்தியாவின் கொள்கை முடிவுகளில் எதிரொலிக்க வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர், கொள்கை முடிவுகளில் பங்கெடுப்பது இந்த நேரத்தில் தேவையானது. இந்த நேரத்தின் தேவையும் அதுவே. மகளிர் இட ஒதுக்கீட்டை 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தியிருக்க வேண்டும். இது குறித்த கொள்கை ஏற்பட்ட உடனே, அதனை சரியான நேரத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும்.

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது – என்று பிரதமர் மோடி பேசினார்.

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.