எல்லாத்துக்கும் புஸ்சி தான் காரணம்..விஜய் காலில் விழுந்து கதறினேன்– தவெகவிலிருந்து விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
Seithipunal Tamil April 17, 2026 08:48 PM

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தூத்துக்குடி மாவட்ட முன்னாள் நிர்வாகி அஜிதா ஆக்னல், கட்சி தலைமையை குறிவைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அவர், பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்சிக்காக தீவிரமாக பணியாற்றியதாகவும், ஆனால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

“என் குடும்பமே நீண்டகாலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் ஈடுபட்டிருந்தது. அவரது அழைப்பின் பேரில் அரசுப் பணியையும் புறக்கணித்து கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டேன். ஆனால் கட்சியில் பெண்களுக்கு உரிய மதிப்பும் பாதுகாப்பும் இல்லை” என்று குற்றம்சாட்டினார்.

தன்னை தலைவரைச் சந்திக்க பலமுறை முயன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், இறுதியில் நடைப்பயிற்சி நேரத்தில் சந்தித்தபோது தனது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் கூறினார். “ஒரு கட்டத்தில் காலில் விழுந்து கேட்டும் பதில் கிடைக்கவில்லை. பின்னர் சந்திக்க முயன்றபோது காரின் கண்ணாடியைக் கூட திறக்காமல் சென்றது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது” என தெரிவித்தார்.

மேலும், கட்சியில் பதவி வழங்கலில் முறைகேடுகள் உள்ளதாகவும், உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டிய அவர், சில நிர்வாகிகளை குறிவைத்து விமர்சனம் செய்தார்.

திமுகவில் இணைந்தது குறித்து பேசுகையில், “பணம் அல்லது பதவிக்காக அல்ல; சமூக அடையாளம் மற்றும் மக்கள் சேவைக்காகவே இந்த முடிவு. கடலோர மக்களின் உரிமைகளுக்காகவும், பொதுமக்கள் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று அஜிதா ஆக்னல் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.