பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட நடிகை தாமரை செல்வி, தற்போது தவெக தலைவர் விஜயின் கட்சியான தவெகவில் இணைந்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில், கட்சியில் இணைந்த போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தாமரை செல்வி ஆரம்பத்தில் கிராமப்புறங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். பாரம்பரிய இசை நாடகங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி, மெதுவாக மக்கள் கவனத்தை பெற்றார். பின்னர், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 90 நாட்கள் வீட்டில் இருந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். அவரது இயல்பான நடத்தை, நேர்மையான பேச்சு மற்றும் உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள் ஆகியவை அவரை பொதுமக்கள் மனதில் தனி இடம் பெறச் செய்தன.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்தவரை, தாமரை செல்வியின் முதல் திருமணம் பல சிக்கல்களால் முடிவடைந்தது. அவருக்கு ஒரு மகன் உள்ளார். பின்னர் பார்த்தசாரதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார். மேலும், பிக் பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளில் தனது கணவருடன் இணைந்து பங்கேற்று ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சீரியல் மற்றும் சினிமா வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி வரும் தாமரை செல்வி, “சின்ன மருமகள்” என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்வேதாவின் கணவர், தாமரை செல்வியிடமிருந்து மூன்று பவுன் சங்கிலியை வாங்கி அடகு வைத்து திருப்பிக் கொடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தாமரை செல்வி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், தற்போது அவர் நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பது அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இதனால், இனி அவர் அரசியல் மற்றும் நடிப்பு ஆகிய இரண்டையும் இணைத்து எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.