தொகுதி மறுவரையறை மசோதாவை நிரைவேற்றுவதற்காக இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதில், 278 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 211 உறுப்பினர் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், மசோதா நிறைவேறுவதற்கான 03 இல் இரண்டு பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்கப்படவில்லை. இதனுடன் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவும் தோல்வியடைந்துள்ளது.
இந்த தொகுதி மறுவரையறையை கடுமையாக எதிர்த்து வந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருந்து வந்தது. இந்த சூழலில், இன்று தொகுதி மறுவரையறை மசோதா பெரும்பான்மை இல்லாததால் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் 'ஜனநாயகம் வென்றது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது. இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவம் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது. நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை.
நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.