ஓமன் வளைகுடாவில் ஈரான் நாட்டு கொடியுடன் பயணித்த கப்பலை அமெரிக்க கடற்படை அதிரடியாகக் கைப்பற்றியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “கடற்கொள்ளை” என்று சாடியுள்ள ஈரான், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்த மோதலின் எதிரொலியாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முற்றுகை நீங்கும் வரை இந்த வழியாக எந்தக் கப்பல்களும் அனுமதிக்கப்படாது என்றும், மீறி வரும் கப்பல்கள் எதிரிகளாகக் கருதப்படும் என்றும் ஈரான் இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த அரசியல் சூழலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 7 சதவீதம் உயர்ந்து 96.88 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 90.33 டாலராகவும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி நீண்ட காலத்திற்கு மூடப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ நெருக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்