
இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், தனது பிரபலமான 107 மற்றும் 197 ரூபாய் ப்ரீபெய்ட் பிளான்களின் செல்லுபடி காலத்தை மீண்டும் குறைத்துள்ளது. 2026-ம் ஆண்டின் புதிய கட்டண உயர்வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரூ. 107 பிளான் 22 நாட்கள் செல்லுபடி காலத்தை வழங்கியது. தற்போது இது 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 35 நாட்களாக இருந்த இந்த பிளானின் ஆயுட்காலம், படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது 20 நாட்களுக்கு வந்துள்ளது. இதில் 200 நிமிடங்கள் அழைப்புகளும், 3ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகின்றன.
அதேபோல் ரூ. 197 பிளானின் செல்லுபடி காலம் 42 நாட்களில் இருந்து 35 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டேட்டா வசதி 4ஜிபி-யிலிருந்து 5ஜிபி-யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 300 நிமிடங்கள் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி உள்ளது.
தனியார் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் தனது பிளான்களின் கால அளவை குறைப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபடலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva