SAC அய்யாவிற்கு அவர் பிள்ளை (விஜய்) முக்கியமெனில் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம். அரசியல் விழிப்புணர்வு படங்களை மக்களுக்கு தந்த SA சந்திரசேகர் அவர்கள் இப்போது தனது பிள்ளையை காப்பாற்ற களத்தில் திடீரென பேட்டிகள் அளித்து வருவதாக இயக்குநர் சேரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதாவது, தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனு தாக்குதலில் தனது தந்தைக்கு கடன் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக அளித்த பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், அதை சுட்டிக்காட்டிய இயக்குநர் சேரன், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற அரசியல் விழிப்புணர்வு படங்களை மக்களுக்கு தந்த SA சந்திரசேகர் அவர்கள் இப்போது தனது பிள்ளையை காப்பாற்ற களத்தில் திடீரென பேட்டிகள் அளிக்கிறார்.
பெரும் அரசியல் பார்வை உள்ள ஒரு மனிதர் தனது மகனின் அரசியலில் தெளிவும் உழைப்பும் தொலைநோக்கு சிந்தனையும் இல்லை என தெரிந்தும் அவரை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும். அடுத்த தலைமுறை இளைஞர்களை அவர்களுக்கான அரசியல் புரிதலை உள்வாங்கி கற்றுக்கொடுக்காமல் வெறும் கூட்டம் காண்பிக்க பயன்படுத்தி பலனடைய நினைப்பது சரியா என யோசிக்கவில்லை.
தனது பிள்ளை என்பதால் இவரைப் போன்ற பெரும் முதிர்ச்சியானவர்கள் விஜயை காப்பாற்ற அரசியலில் ஊக்கமளித்து செயல்படுவது வருத்தமளிக்கிறது. கற்றுக்கொடுங்கள் முதலில். தயாராக்குங்கள் அவரையும் அவர் ரசிகர்களையும், பின்னர் எல்லோருக்கும் நாம் தேவையா என அவரே முடிவு செய்வார்.
நீங்கள் இந்த சமூகத்துக்கு எந்த தீங்கும் விளைவித்துவிட கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு. அடுத்த தலைமுறையை ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள் இவர்கள். SAC அய்யாவிற்கு அவர் பிள்ளை முக்கியமெனில் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம். சிந்தியுங்கள் மக்களே.'' என குறிப்பிட்டுள்ளார்.