கடந்த 2021ஆம் ஆண்டில் தென்கொரிய நகரமான டேகுவில் (Daegu) இரண்டு பயிற்சி போர் விமானங்கள் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த இரண்டு விமானங்களும் அதிவேகத்தில் மோதிக்கொண்டன.
அதைத் தொடர்ந்து விமானிகள் பாராசூட் மூலம் வெளியேறிய நிலையில், விமானங்கள் விபத்தில் சிக்கின. இந்த சம்பவம் தென்கொரியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பின்னர் இதுகுறித்த விசாரணைக்கு தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டது.
இந்த போர் விமான விபத்துக்கான விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் இறுதி பயிற்சி பறப்பில் இருந்த விமானி, நடுவானில் செல்ஃபி எடுக்க முயன்றதால் எதிரே வந்த விமானத்தை கவனிக்காமல் மோதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், 880 மில்லியன் வோன் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கொரிய தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விமான விபத்துக்கு காரணம் முழுக்க முழுக்க விமானிதான் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் பறந்த விமானி ஓய்வு பெரும் நிலையில், தனது இறுதி பயிற்சி பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது தனது இராணுவப் பிரிவுடன் மேற்கொள்ளும் கடைசிப் பறக்கும் பயணத்தை நினைவுகூரும் வகையில் புகைப்படங்களை எடுக்க அந்த விமானி விரும்பி செல்பி எடுத்துள்ளார்.
அப்போது எதிரே வந்த விமானத்தை கவனிக்காமல் அதன்மீது இவரின் விமானம் மோதியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தால் சேதமடைந்த விமானங்களை சீரமைக்க இராணுவத்திற்கு 880 மில்லியன் வோன், அதாவது இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் அளவு செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து குறிப்பிட்ட விமானிக்கு 88 மில்லியன் வோன் அளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.