இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
Dhinasari Tamil May 02, 2026 10:48 PM

மதுரை, உசிலம்பட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோவில் பிரச்சனை காரணமாக மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் பூசாரியை மாற்றுவது குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டு கொள்வது குறித்து அறிவுறுத்திய நிலையில் எழுமலை மக்கள் மாதாந்தம் சுப்பிரமணியசுவாமி கோவில் சிலை கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாதாந்தம் சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இக்கோவில் பூசாரியாக உள்ள கணேசன் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் திருமண நிகழ்வுகள் நடைபெறும் பொழுது ஜாதி அடிப்படையில் பாராபட்சம் பார்ப்பதாகவும் ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டி அவரை மாற்றக்கோரியும், மாதாந்தம் சுப்ரமணியர் கோவில் பெயர் பலகையில் எழுமலை என்ற ஊருக்கு பதிலாக ஆத்தங்கரைபட்டி என்ற பெயரை மாற்றக் கோரியும் ஆத்தங்கரை பட்டி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி, உசிலம்பட்டி டிஎஸ்பி ஷண்முகசுந்தரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், எழுமலை மக்கள் பாரம்பரியமாக நடைபெற்று வரும் கோவில் திருவிழாவை வழக்கம்போல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி எழுமலை காவல் நிலையம் முன்பு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் அறிந்து, விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவில் பூசாரியை மாற்றுவது குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டு கொள்வது குறித்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாதாந்தம் சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் மயில் வாகனத்தில் இருந்த சுப்பிரமணியசுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து எழுமலை மக்கள் அரோகரா கோசங்கள் முடங்க சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.