நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இது குறித்து தங்களின் வருத்தத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
ஸ்டாலின் - திமுக
``திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் எங்களுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
கடுமையான போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறோம். இன்று நானும் எனது கட்சியினரும் அண்ணன் ஸ்டாலினைச் சந்தித்தோம்.
எங்களை அவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். `ஒரு சவால் மிக்கத் தொகுதியில் நல்ல வெற்றி' என்று சொன்னார்.
உங்களுடைய (ஸ்டாலின்) வெற்றி வாய்ப்பு இழந்த செய்தி எங்களை மிகவும் பாதிக்கிறது என்று அவரிடம் சொன்னேன்.
நீங்கள் சட்டமன்றத்தில் நிற்க வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய விருப்பம். தமிழ்நாடு மக்களின் விருப்பமும் அதுதான்.
தேவைப்பட்டால் சிதம்பரம் தொகுதியில் நாங்கள் ராஜினாமா செய்கிறோம். நீங்கள் போட்டியிடுங்கள் என்று விருப்பத்தைத் தெரிவித்தோம்.
ஆனால் முதலமைச்சர் என் கையை அழுத்தமாகப் பிடித்து 'அந்த வார்த்தையை நீங்கள் சொல்லக் கூடாது. நீங்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும். சிறப்பாகச் செயல்பட வேண்டும்' என்று உரிமையுடன் சொன்னார்.
எங்களால் நாங்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாட முடியவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.