தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைப்பு..?
Seithipunal Tamil May 07, 2026 05:48 AM

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒத்தி வைத்துள்ளது.

நடப்பு கல்வியாண்டின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 03-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை மொத்தம் 08 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் எழுதினர்.

அதன்படி, மே-08 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒத்திவைத்ததாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

அதாவது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ளது. இதன்காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட மாநில அரசின் அனுமதி தேவைப்படும். இதனால், தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அரசு பொறுப்பேற்று மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின் உரிய அனுமதி பெற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனகே கூறப்படுகிறது. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு ஒருநாள் முன்பாக அறிவிப்பு வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.