பதவியேற்பு இழுபறி.. விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்!
Dinamaalai May 07, 2026 08:48 AM

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாததால் அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகவே நீடித்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாகத் தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த 'முதலமைச்சர் அந்தஸ்து' கொண்ட சிறப்புப் பாதுகாப்பு வளையம் மற்றும் கான்வாய் வாகனங்கள் திடீரெனத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்திலிருந்து அவர் நீலாங்கரை வீட்டுக்குப் புறப்படுவதற்குச் சற்று முன்பாகவே, 4 பாதுகாப்பு வாகனங்களும் தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றன.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தினமே, விஜய் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பில் காவல்துறை சார்பில் அவருக்குப் பலத்த பாதுகாப்புடன் கூடிய கான்வாய் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் நீடிப்பதாலும், ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாலும் இன்னும் அவர் முறைப்படி பதவியேற்கவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டன. அவை தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு சென்றன. 4 கான்வாய் வாகனங்களும் புறப்பட்ட நிலையில் காவல் துறையினர் மட்டுமே விஜய்யுடன் உள்ளனர். இதனால் கான்வாய் வாகனங்கள் எதுவுமின்றி விஜய் நீலாங்கரை வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.   இந்நிலையில் பதவியேற்புக்கு முன்னரே இத்தகைய ஆடம்பரப் பாதுகாப்பைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது எனக் கருதி கான்வாய் வாகனங்களைத் தானாக முன்வந்து திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.