மே 7, 2026: தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கட்டும் என்றும், ஆறு மாதங்களுக்கு எந்தவித தொந்தரவும் செய்யாமல் பார்ப்போம் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனியார் செய்தி நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி செயல்பட அனுமதிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக, இரண்டாவது பெரிய கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கும் தவெக:இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தற்போது வரை தமிழக வெற்றி கழகத்துக்கு 113 இடங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 6 இடங்கள் தேவைப்படுவதால், அக்கட்சியின் தலைவர் விஜய் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரியுள்ளார்.
ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்குமா இல்லையா என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த முதல்வர் கன்வாய் மற்றும் உயர்தர பாதுகாப்பு நேற்று இரவு முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கட்டும் – மு.க ஸ்டாலின்:இந்த பரபரப்பான அரசியல் சூழலில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கட்டும். ஆறு மாதங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி பார்க்கிறோம்” என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
திமுக ஒரு அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு திமுக அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடர்வதோடு, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் அந்தஸ்து பாதுகாப்பு ரத்து? கான்வாய் வாகனங்கள் வாபஸ்.. என்ன காரணம்!
திமுக கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும்:மேலும், தனது முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எது என்று கேட்டபோது, “புதிய அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவு திட்டத்தை தொடர வேண்டும். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். தமிழக வெற்றி கழகம் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்குவதாக உறுதி அளித்திருந்த சூழலில், அது கடினமாக இருந்தாலும் குறைந்தபட்சம் ரூ.1000 வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், 2021 தேர்தல் அறிக்கையில் கட்சி அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை தனது அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக நீட் தேர்வை ரத்து செய்வது போன்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“இந்த தேர்தலிலும் எங்களால் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே வழங்கினோம். தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்குவது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவது சற்று கடினமான விஷயம்தான். ஆனால் அதை செய்தால் மகிழ்ச்சிதான்” எனவும் அவர் பேசியுள்ளார்.