தெலங்கானா மாநிலத்தில் மாறு வேடத்தில் சென்ற பெண் காவல் ஆணையரிடம் தவறான நோக்கத்தில் அணுகிய 40 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பெண்கள் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம் அம்மாநிலத்தின் ஹைதரபாத் நகரில் நடைபெற்றுள்ளது. அங்கு மல்காஜ்கிரி மாவட்ட காவல் ஆணையர் சுமதி தெருக்களில் பெண்களின் பாதுகாப்பை மதிப்பிடும் நோக்கில் நடத்தப்பட்ட நள்ளிரவு நேரத்தில் ரகசிய நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்தார். அதன் ஒரு பகுதியாக, , தில்சுக் நகரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண பெண் போல உடையணிந்து சாலையில் சென்றிருக்கிறார்.
இரவு நேரங்களில் பயணம் செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு உள்ளிட்ட கள நிலவரங்களைக் கண்காணிப்பதற்காக ஓரிடத்தில் கமிஷனர் சுமதி தனியாக நின்றிருந்தார். அப்போது சுமார் 40 ஆண்கள் அவரை அணுகியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பலர் மது அல்லது கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் இளைஞர்கள், மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர்.
இந்த நடவடிக்கையின்போது ஆண் காவலர்கள் மாறுவேடத்தில் அப்பகுதியில் பதுங்கி இருந்தனர். அவர்கள் உடனடியாக குழுவாக செயல்பட்டு மாவட்ட காவல் ஆணையர் சுமதியை தவறான நோக்கத்துடன் அணுகிய நபர்களை கைது செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இரவு நேர ரோந்துப் பணிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பொது இடங்களைக் கண்டறிவதற்கும், மற்றும் நள்ளிரவு நேரங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை ஆராய்வதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம் ஆணையர் சுமதி சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே பல நபர்கள் அவரை அணுகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் அடையாளங்கள் பொதுநலன் கருதி வெளியிடப்படவில்லை என்றும், அவர்கள் மீண்டும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடாத வண்ணம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. என்னதான் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சென்று குற்றங்களை தடுக்கும் முனைப்பில் செயல்பட்டாலும் பெண்களால் இரவு நேரங்களில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவுக்கு சில ஆண்கள் நடந்து கொள்வதாக சமூக வலைத்தளத்தில் பலரும் கூறியுள்ளனர். போதைப்பொருட்கள் பயன்பாடு, மது பழக்கம் போன்றவை அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு சமூகம் மோசமாகி இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.