நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் விஜயை ஆட்சியமைக்க இதுவரை ஆளுநர் அழைக்கவில்லை. நேற்று மதியம் விஜய் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள் தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை சேர்த்து தங்களுக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறியிருந்தார். ஆனாலும் தற்போது வரை விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர் அழைக்கவில்லை. இந்நிலையில்தான், இன்று காலை திடீரென விஜய் மீண்டும் ஆளுநரை சந்தித்தார். அப்போது ‘வேறு எந்த கட்சி தவெகவை ஆதரிக்கும்? 112 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு நிலையான ஆட்சி கொடுக்க முடியுமா?.. பெரும்பான்மை இல்லாமல் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்?.. பதவியேற்ற பின் பெரும்பான்மை கிடைத்து விடும் என எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?’ போன்ற பல கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
மேலும், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தால் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவார்கள். உங்கள் ஆட்சி கவிழும். மக்களிடம் தேவையில்லாத குழப்பங்கள் வரும்’ எனவேதான் இந்த காலதாமதம் என ஆளுநர் விஜயிடமும் தவெக முக்கிய நிர்வாகிகளிடமும் சொன்னதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த கேள்விகளையெல்லாம் ஆளுநர் கேட்கக்கூடாது.. அதிக தொகுதிகள் வெற்றிபெற்ற கட்சி என்கிற அடிப்படையில் தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்.. எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய் சட்டமன்றத்தில் நிரூபிப்பார்.. அதுதான் நடைமுறை’ என தவெக நிர்வாகிகள் சொல்கிறார்கள்..