தென் ஆப்பிரிக்கா அருகே ஆடம்பர சொகுசுக் கப்பல் ஒன்றில் ஹண்டா என்னும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 3 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து MV Hondius என்று பெயர் சூட்டப்பட்ட கப்பலில் இருந்த 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது கேப் வர்டி என்னும் இடத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுளது.
கப்பலில் இருந்து நேற்று (புதன்கிழமை) மூன்று பயணிகள் மீட்கப்பட்டனர், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஒரு நோயாளி தற்போது தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார், அதே நேரத்தில் சுவிட்சர்லாந்துக்குத் திரும்பிய மற்றொரு முன்னாள் பயணி ஸூரிச்சில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எந்த அறிகுறிகளும் இல்லாமல் தற்போது கப்பலில் இருக்கும் அனைத்து பயணிகளும், கப்பல் கேனரி தீவுகளை அடைந்தவுடன் இறங்க அனுமதிக்கப்படுவார்கள். எனினும் அவர்கள் ஸ்பெயினின் இராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், மற்ற அனைத்து பயணிகளும் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, அந்தந்த நாடுகளின் சுகாதார நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
ஹண்டா வைரஸ்கள் என்பவை எலி, அணில், முள்ளம்பன்றிகள் உள்ளிட்ட கொறித்துண்ணிகளால் (rodents) பரவும் வைரஸ்கள் ஆகும், அவை மனிதர்களுக்குத் தொற்று நோயை உண்டாக்கக்கூடியவை.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 10,000 முதல் 100,000 பேருக்கு இந்த நோய் ஏற்படுகிறது, இதன் தீவிரம் குறிப்பிட்ட வகையைப் பொறுத்து மாறுபடும்.
சொகுசுக் கப்பலில் கண்டறியப்பட்ட ஹண்டா வைரஸ், ஏண்டஸ் ஹண்டா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் அர்ஜெண்டினா மற்றும் சிலி நகரங்களில் இருக்கும். இந்தக் கப்பல் ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜெண்டினாவில் இருந்து கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

ஹன்டா வைரஸ் முதன்மையாக விலங்குகள் மூலம் பரவுகிறது. எலிகள் அல்லது சுண்டெலிகளுடனான தொடர்பு, அல்லது அவற்றின் சிறுநீர், எச்சம், அல்லது உமிழ்நீர் வழியாக இது மனிதர்களுக்குத் தொற்றுகிறது.
பெரும்பாலும் வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்யும்போது இந்த வைரஸ் காற்றில் பரவுகிறது. அரிதான சூழல்களில், அசுத்தமான மேற்பரப்புகள் மூலமாகவும் ஹண்டா வைரஸ் பரவுகிறது.
எனினும் பொதுமக்கள் நலனுக்கு ஒட்டுமொத்தமாக ஏற்படும் அபாயம் குறைவே என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.