பதவி ஆசைக்காக தவெகவுடன் கூட்டணியா.? திமுகவிற்கு பட்டியலிட்டு பதிலடி கொடுத்த காங்கிரஸ்
கு. அஜ்மல்கான் May 07, 2026 03:44 PM

தமிழகத்தில் தொங்கு சட்டசபை

தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் 53 கூட்டணி இடங்களிலும் வெற்றி பெற்றது. எனவே 118 என்ற அந்த எண்ணை தொட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற தவெக முயன்றது. இதில் முதல் ஆளாக காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை திமுக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டதாகவும், தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளதாகவும் விமர்சித்திருந்தது. இதற்கு பதில் கொடுக்கும் வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் அளித்துள்ள விளக்கத்தில், 

தவெகவுடன் கூட்டணி அமைத்து ஏன்.?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்துச் சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிலர் முதுகில் குத்திவிட்டதாக கூறுவதை இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஜனநாயக நாட்டில் மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளைத் தருகிறது. அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்குத் தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். 

தவெக-வின் கொள்கைப் பிரகடனமும் காங்கிரஸின் ஆதரவும் :

தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களைத் தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவர் காட்டிய வழியில் சமூக நீதிக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம் என்கிற கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி, சமூக நீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஒரு இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் எந்தக் காலத்திலும் காலூன்றி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது.

மதவாத சக்திகளை தனிமைப்படுத்தனும்

மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும், தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். இதில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.

தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி என்றும் மதவாதத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதியைக் காக்கவும் தனது பயணத்தைத் தொடரும் என அந்த அறிக்கையில் ராஜேஸ் கூறியுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.