மேற்கு டெல்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 3 வயது சிறுமி ஒருவர் 57 வயது ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி பள்ளிக்குச் சென்ற இரண்டாவது நாளிலேயே இந்த கொடூரம் நடந்துள்ளது. மாலையில் வீடு திரும்பிய குழந்தை வலியால் துடித்ததைக் கண்ட தாய், விசாரித்தபோது பள்ளியில் உள்ள ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று தன்னை அந்த நபர் தாக்கியதாக சிறுமி கூறியுள்ளார்.
இது குறித்து மே 1-ம் தேதி ஜனக்புரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் அடையாளத்தை வைத்து அந்தப் பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், அரசுத் தரப்பு கடுமையாக எதிர்த்தும் மே 7-ம் தேதி நீதிமன்றம் அந்த நபருக்கு ஜாமீன் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விசாரணை என்ற பெயரில் குழந்தையை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்ததாகவும் சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒரு ஆசிரியருக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்படும் நிலையில், குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.