தமிழக அரசியலில் திருப்புமுனையை உருவாக்கிய சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டியது. ஆனால், தனித்து ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத சூழலில், முதன்முதலில் ஆதரவு கரம் நீட்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பல கட்ட அரசியல் ஆலோசனைகள் மற்றும் தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளும் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தன.
இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் சமன்பாடு உறுதியானதை அடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நேற்று விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.
அதன்படி, விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் பிரமாண்ட விழா சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழில்துறை முன்னோடிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டுள்ளதால், அரங்கம் முழுவதும் கொண்டாட்ட உற்சாகம் நிரம்பியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து நேரடியாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.