தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதும் வகையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனை முன்னிட்டு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் திருவிழா களமாக மாறியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் அரங்கில் திரண்டுள்ளதால், அந்த பகுதி முழுவதும் உற்சாக அலை பரவியுள்ளது.

பதவியேற்பு மேடையின் முதல் வரிசையில், முதல்-அமைச்சரின் இருக்கைக்கு நேர் எதிரே விஜய்யின் பெற்றோருக்கான சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகன் மாநிலத்தின் உயரிய பொறுப்பை ஏற்கும் தருணத்தை கண்கலங்கிய பெருமையுடன் அவர்கள் காணவிருக்கின்றனர் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு விஜய் வருகை தந்தபோது, அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அரங்கம் முழுவதும் தொண்டர்களின் முழக்கங்கள் எதிரொலித்ததால், விழா தளம் அரசியல் எழுச்சியின் அடையாளமாக காட்சியளித்தது.
தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகை திரிஷாவும் வருகை தந்துள்ளார். விழாவில் கலந்து கொண்டிருந்த திரையுலக நண்பர்களுடன் அவர் மகிழ்ச்சியாக உரையாடிய காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
இன்று காலை சுமார் 10 மணியளவில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில், தமிழக ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.