திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... வைகை ஆற்றில் வைத்து கொடூரம் !
மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் தாக்க முயன்றபோது, விவேக்கின் நண்பர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் தாக்குதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனின் மகன் விவேக் (21). இவர் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தனது நண்பர்கள் நவீன் மற்றும் மயில்ராஜுடன் தட்டாங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கிராமத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றிவளைத்தது. அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் தாக்க முயன்றபோது, விவேக்கின் நண்பர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் ஒருவருக்கு கை மற்றும் காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது
ஆனால் விவேக்கை சுற்றிவளைத்த கும்பல், அருகிலுள்ள வைகை ஆற்று பகுதியில் அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. பலத்த காயமடைந்த விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, விவேக்கின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மதுரை–ராமேஸ்வரம் தேசிய நான்கு வழிச்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மாரநாடு பகுதியைச் சேர்ந்த அழகு சுந்தரம் (20), காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சந்துரு (24), அழகேசன் (20), மமரங்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலா (22) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.