CM Vijay speech: நிதி எவ்வளவு? தமிழ்நாடு அரசின் நிலைமை என்ன? வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதியளித்த முதல்வர் விஜய்!
TV9 Tamil News May 10, 2026 04:48 PM

மே 10, 2026: தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடன் ஒன்பது அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அவர்களுக்கான துறைகள் விரைவில் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதவியேற்ற உடன், 200 யூனிட் மின்சாரம் இலவசம் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக “சிங்கப்பெண் படை” அமைக்கப்படும் என்ற முதல் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

10 லட்சம் கோடி கடன்:

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: “தமிழ்நாடு அரசு தற்போது இருக்கக்கூடிய நிலையை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். கஜானாவை காலி செய்து விட்டார்கள். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்து சென்றிருக்கிறார்கள்.

நிதி நிலமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்:

அப்படிப்பட்ட ஒரு நிலைமையில்தான் இந்த பொறுப்பை கையில் எடுத்திருக்கிறோம். உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும் என்னென்ன இருக்கிறது, என்ன இல்லை, எது எந்த நிலைமையில் இருக்கிறது என்பதெல்லாம். அதையெல்லாம் பார்த்துவிட்டு, அதை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன்.

ஒரு டிரான்ஸ்பரண்டான அரசாக தமிழக அரசு இருக்கும். தமிழ்நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டு அங்கிருந்து நான் முன்னெடுத்து செல்வேன். அதைத்தான் முதலில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், யாரையாவது போய் சந்திக்க வேண்டும் என்றால் முகத்தை மூடிக்கொண்டு நான் போய் சந்திக்க மாட்டேன். மறைமுகமாக, உங்களுக்குத் தெரியாமல் போய் சந்திக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இல்லாமல் செய்வேன்.

கொஞ்சம் அவகாசமும் வேண்டும்:

இவ்வளவு பெரிய பொறுப்பை என் கையில் கொடுத்திருக்கிறீர்கள். அதே சமயத்தில் எனக்கு கொஞ்சம் அவகாசமும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் சொன்னவற்றை எல்லாம் படிப்படியாக நிறைவேற்ற முயற்சிப்பேன். அதே சமயத்தில், சற்று அவகாசம் கொடுத்தால் அது உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும்.

இது உங்களுடைய ஆட்சி. பெண்கள் பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருக்கும். போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுப்பதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ, அத்தனையும் இன்று முதல் மேற்கொள்வேன். நம் பிள்ளைகளை அதிலிருந்து காப்பாற்றுவது நம் பொறுப்பு.

என்னை அவமானப்படுத்தியவர்களாக இருந்தாலும், என்னை கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தாலும், அவர்களும் என் மக்கள்தானே. நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும், 8 கோடி மக்களும் என் மக்கள்தானே.

அடிப்படை விஷயங்களான கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பாலம் வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவற்றில்தான் முழு முதல் கவனம் இருக்கும்.

மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன்:

முன்னாடியே சொன்ன மாதிரி, மக்கள் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன். அது எனக்கு அவசியமும் இல்லை. இந்த விஷயத்தில் தப்பு செய்ய மாட்டேன்; தப்பு செய்யவும் விட மாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி, என்னுடைய அரசியலில் என் கூடவே இருந்தாலும் சரி, அதை விட மாட்டேன். யாருக்கேனும் அந்த எண்ணம் வந்தால் உடனடியாக அதை அழித்து விடுங்கள்.

இங்கு ஒரே ஒரு சென்டர்தான். என் தலைமையில் இயங்கும் சென்டர்தான். இந்த பக்கம் ஒரு பவர் சென்டர், அந்த பக்கம் ஒரு பவர் சென்டர் என்பதெல்லாம் கிடையாது.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் மக்கள், மீனவர்கள் என அனைவருக்குமான அரசாக இந்த தமிழக வெற்றி கழக அரசு இருக்கும். எல்லோரும் நன்றாக இருப்போம்” என பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.