யாருக்கு 200 யூனிட் இலவசம்?!.. மக்களிடம் குழப்பம்!.. தமிழக அரசு விளக்கம்!...
WEBDUNIA TAMIL May 10, 2026 09:48 PM


தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணியளவில் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் அர்லேக்கர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, விஜயின் நட்பு வட்டாரங்கள் மற்றும் தவெக கட்சியை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

இந்த மேடையில் விஜயோடு சேர்த்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதன்பின் முதல்வராக மேடையில் பேசிய விஜய் ‘நான் மக்களை ஏமாற்றமாட்டேன்.. படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் ஒன்றும் தேவதூதன் அல்ல. பசி, கஷ்டங்களை பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறேன்’ என பேசினார்.

அதன்பின் வீட்டுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கான பாதுகாப்பு, போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை என 3 கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். இதில், 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதில் மக்களிடம் குழப்பம் நீடித்து வருகிறது. அதாவது பிரச்சாரத்தில் பேசிய போது ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்லியிருந்தார். ஆனால், தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவசம் என சொல்கிறார்கள். அதுவும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்குதான் இது பொருந்தும் என்றெல்லாம் பலரும் சமூகவலைத்தளங்களில் பரப்பினார்கள். குறிப்பாக திமுகவினர் இதை அதிகமாக விமர்சித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்களித்துள்ள தமிழக அரசு ‘ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் இலவசம் அப்படியே தொடரும். 2 மாதங்களில் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 200 யூனிட் இலவசம். 500 யூனிட்டுக்கு மேலே பயன்படுத்தினால் 100 யூனிட் இலவசம்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.