காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
க.சே.ரமணி பிரபா தேவி May 15, 2026 04:14 PM

59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிப்பதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறும்போது, ’’2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு என்பதை தமிழகம் ஏற்காது’’ என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர். ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.

வாக்குறுதியை காப்பாற்றிய முதல்வர் விஜய்

கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய TVK தலைவர் விஜய், தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார்.

தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

36% கமிஷன் அரசியல்

36% கமிஷன் அரசியலில் இருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும்.

புதிய அரசு.

புதிய நம்பிக்கை’’ என்று மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 10 அன்று பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிலையில் முழு அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.